Friday, September 5, 2014

என்னைத்தவிர யாருக்கு?

'எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?' துயரம் துரத்தும்போது கேட்டுக் கொள்ளும் டெம்ப்ளேட் கேள்வி. நீங்கள் ஒருமுறையேனும் கேட்டிருக்கிறீகளா? நான் பலமுறை கேட்டுவிட்டுக் கேள்வியை மாற்றி விட்டேன். 'என்னைத்தவிர யாருக்கு இப்பிடியெல்லாம் நடக்கும்?' - அது,மிகுந்த தன்னம்பிக்கையையும், ஒருவித மமதையையும் கொடுத்துவிடுகிறது.

கடந்த என் பிறந்தநாள். காலை நன்றாக விடிந்திருந்தது. முதல்நாள் மாலை கணணி வேலை செய்வதை நிறுத்தியிருந்தது.டிஸ்ப்ளே வரவில்லை.அன்றைக்கு என்று பார்த்து எனக்கு கணனியில் வேலையிருந்தது.திட்டமிட்டு விரைவாகச் செய்துமுடிக்க நினைத்திருந்தேன்.இனி கொண்டுபோய் திருத்துவது சாத்தியமில்லை, காலையில் பார்த்துக் கொள்ளலாம் என மனதைத் தேற்றிக் கொண்டேன். அன்றைய இரவைக் கடப்பது பெரும் பிரயத்தனமாக இருந்தது. இணையத்துக்கு முழுமையாக அடிமையாகிப் போயிருந்ததை உணர்ந்தேன்.

பிறந்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளலாம் என்கிற நற்சிந்தனையுடன், அதிகாலையிலேயே எழுந்து, ஒன்பது மணிவரை காத்திருந்து, இப்படியான நேரத்தில் த்ரீவீலரே வராது என்கிற அனுபவம் கற்றுத்தந்த பாடத்தில் காத்திருக்காமல், தெருமுனைவரை சிஸ்டத்தைத் தூக்கிச் சென்று, த்ரீவீலரில் கடையை அடைந்து, பிரச்சினையைச் சொல்லி, இன்றைக்கே தேவையென்று கூறி, இருக்கையில் அமர்ந்துகொண்டேன். உஸ்ஸ்!

சோதனைகளின் முடிவில்  RAM தான் பழுதென்று மாற்றியாகிவிட்டது. 'அப்பாடா நல்லபடியா முடிஞ்சுதே... சாதிச்சுட்டம்ல!' என்கிற மமதையோடு கார்ட்டை நீட்டினேன்.
"ஸாரி பாஸ் எங்க மெஷின் அப்செட். காஷ் தாங்க இங்க ஆர்பிகோ பக்கத்தில ATM இருக்கில்ல"
ஒருகணம் மனம் துணுக்குற்றது 'நம்ம ராசி வேலை செய்ய ஆரம்பிச்சுட்டுதோ... சேச்சே இருக்காது' தைரியம் சொல்லிக்கொண்டே நடந்தேன்.

இந்தமாதிரியான என் வழமையான சூழ்நிலைக்கு மாறாக ATM இல் ஆட்களில்லை. ஆச்சரியத்துடன் நெருங்கினால், Out Of Service என்றிருந்தது. ஏறக்குறைய ஏழரை ஆரம்பமாகியிருந்தது உறுதியானது.

பேரூந்திலேறி இரண்டு நிறுத்தங்கள் கடந்து மூன்றாவதில் இறங்கி சற்று நேரம் நடந்து ATM. இரண்டு வரிசைகள் ஒன்றில் இளம்பெண்கள் பெண்கள், ஓரிரு வயோதிபர்கள். இன்னொன்றில் இளைஞர்கள்.இரண்டாவதில் நின்றுகொண்டேன். மற்றைய வரிசை நகர நேரமெடுக்கும். அதிலும் இளைஞிகள் அம்மாவிடமிருந்து காதலனின் குறுந்தகவல்களை செல்பேசியில் காப்பாற்ற பூட்டிக் கொண்ட இலக்கப் பாஸ்வேர்டைத்தான் பழக்க தோஷத்தில் முதலில் தட்டுகிறார்களாம் என்றோர் வதந்தி உலாவுகிறது. ஆக அந்த வரிசை நகர நேரமெடுக்கும் என்பது என் கணிப்பு.

என் கணிப்பு என்றும் என்னை ஏமாற்றுவதில்லை. விளைவு எப்போதும் எதிர்மாறாகவே இருக்கும்.எங்கள் வரிசை நின்றுகொண்டிருக்க மற்றைய வரிசை நகர்ந்தது. அதற்காக எல்லாம் கணிப்பதை நிறுத்திவிடப்போவதில்லை. 'விடாத கணிப்பு விட்டு விட்டு ஆப்பு ' என்பதுதானே நம் வாழ்வை எப்போதும் சுவாரசியமாக்குகிறது! எங்கள் வரிசையில் ஒவ்வொருவனும் திடீர் விஞ்ஞானியாக மாறி, இந்த உலகத்துக்கு ஏதோ ஒரு உண்மையைக் கண்டறிந்து சொல்லிவிடும் பாவனையில் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். 'அடப்பாவிங்களா! ஏடிஎம்-ல காசு எடுக்கிறக்கு ஏண்டா ஃபோர்ப்ளே செய்கிறீர்கள்?' - மனக்குரல் அலறியது. 

ஒருவாறாக பணத்தை எடுத்துகொண்டு, திட்டமிட்டேன். அந்தப்பக்கம் கடந்து, பேரூந்துக்கு நடந்து ஏறி, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, பிறகு நடந்து.. அதைவிட நடந்தே செல்வது உசிதமானது. உச்சி வெயில். நடுத்தரவயது ஆன்டிகள் எல்லாம் அசமந்தமாக 'எங்கே செல்லும் இந்தப்பாதை ' இலக்கில்லாதது போல நடந்துகொண்டிருந்தார்கள்.

எங்கோ கடைக்குள்ளிருந்து குடையுடன் வந்த ஓர் ஆன்டி மிக இயல்பாக, உரிமையாக என் காதுக்குள் குடைக்கம்பியை சொருகினார். பிறகு எதுவும் நடக்காததுபோல அவராகவே விலகிச் சென்றார். அந்த அன்பில் ஒருகணம் நெகிழ்ந்துபோனேன். யாரவர்? என்காதைக் குடைந்துவிட வேண்டும் என்று அவரைச் செலுத்தியது எது? என்னமாதிரியான எதிர்பார்ப்பில்லாத அன்பு அது!

நடு வெய்யிலில் வீதியில் சென்றுகொண்டிருக்கும் யாரென்றே தெரியாத ஒருவனின் காதுக்குள் கம்பியைவிட்டுக் குடையத் தோன்றும் அன்பு இருக்கிறதே..அந்த அன்புதானே கடவுள்! இல்லையா?-இப்படித் தத்துவார்த்தமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, இன்னோர் ஆன்டி குடையுடன் என் மூக்கைக் குறிபார்த்து வருவது கண்டு, அவசரமாக விலகி வீதியில் இறங்கி  நடந்தேன்.

ஒரு மணிக்கு வீடு திரும்பி, மிகவும் களைத்த நிலையில்,எல்லா சோதனைகளையும் கடந்து சாதித்த திருப்தியுடன்  கணணியை பொருத்தி உயிர்ப்பித்தேன்.

கணிணி அப்படியே இருந்தது,நேற்றுப் பார்த்த மாதிரியே! 

டிஸ்ப்ளே யூனிட் போயிட்டுதா? மாத்தலாமா? மொத்தமா தூக்கி எறியலாமா? மொத்தமாக சோதித்து ஒருவழி பண்ணலாம். மறுபடியும் சிஸ்டம், மொனிட்டர் இரண்டையும் அள்ளிக் கொண்டு மீண்டும்....

"மொனிட்டரும் போயிட்டுது" , "இருக்கா?"
"யூஸ்ட் இருக்கு.. போடுவமா இல்ல புதுசா" , "புதுசா போடலாம்"
"செவண்டீன் போதுமா பெருசா இல்ல.." , "பெருசா"
"அந்தா ரோட்ல போறாரே அவர.." , "போட்டுறலாம்"
எதற்கும் தயாராக இருந்தேன்.

புதிதாக ஒன்றைத் தெரிந்து, முக்கியமாக பரிசோதித்து, மறந்து பணம்கொடுக்க கார்ட்டை எடுத்துவிட்டு...சோகமாக திரும்பினேன் மறுபடியும் ஏ.டி.எம் செல்லத் த்ரீவீலர் பிடிக்க!

திரும்பி வீடு வரும்போது பாதி வழியில் த்ரீவீலர் நின்றுவிட்டதையோ, நான் மீதித்தூரத்தை நடந்தே வந்ததையோ இவ்வளவு ஏன், என் அறைக்குள் நுழைந்து கணினியை உயிர்ப்பிக்க முனைகையில் பவர் கட் ஆகியிருந்ததையோ நான் இங்கே எழுதுவதாக இல்லை. ஏனெனில் இது தன்னம்பிக்கையூட்டும் பதிவு.சமூக அக்கறையில் எழுதப்பட்ட என் சொ(நொ)ந்த அனுபவம்!

'எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?' என்று கேட்காதீர்கள். 'என்னைத்தவிர யாருக்கு இப்பிடியெல்லாம் நடக்கும்?' தன்னம்பிக்கையுடன் கேளுங்கள்!

2 comments:

  1. யாருக்கு இப்பிடியெல்லாம் நடக்கும்?எனக்கும்.........!

    ReplyDelete
  2. கிளைமாக்ச பாத்தா பார்ட்-2 வேற வரும் போல இருக்கே..........?

    ReplyDelete